21 -முறிந்த உறவு



கடந்த ஒரு வாரமாக நீலகண்டனுக்கு மனது சரியில்லை.

அவளைப் பார்த்து சில மாதங்கள் ஆகியிருந்தன.

அவரது சில நண்பர்கள் மூலம், அவளுக்குப் பிறந்திருக்கும் குழந்தை அச்சு அசலாக தன்னைப் போல இருப்பதை அறிந்தார்..அந்தக் குழந்தையைப் பார்த்துவிடத் துடித்தார், ஆனால் அவள் உறவை முறித்துக் கொண்டு விட்டாரே..>.

அவரது மனைவிக்கும் அச்செய்தி எட்டியிருந்தது."இதோ பாருங்க! நீங்க அங்கே போனீங்கன்னு தெரிஞ்சுது..எனக்குக் கெட்ட கோபம் வரும்.நம்ம உறவும் அறுந்துடும்" என்றாள்.

என்னவானாலும் பரவாயில்லை..தன் ஜாடையில் பிறந்துள்ள குழந்தையைப் பார்த்து விடவேண்டும்..என்று தீர்மானித்தவர், அன்று அலுவலகம் முடிந்ததும் நேரே அவள் வீட்டிற்கு சென்றார்.

கதவைத் தட்டியதும், கதவைத் திறந்த பெண்..முகத்தில் இவரைக் கண்டதும் சந்தோஷம்..."எங்கே குழந்தை..எங்கே குழந்தை.." என்றார் ஆவலுடன்.

"எவ்வளவு நாள்தான்..வேற மதத்தைச் சேர்ந்தவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு பொண்ணை ஒதுக்க முடியும்" என்றபடியே..கையில் அவரது ஜாடையில் இருந்த..பேரனை ஏந்தியவாறு வந்தாள் அவரது மனைவி.

(குமுதம்)


Comments

Popular posts from this blog

14 -நில அபகரிப்பு

23 - புனிதம்

20 - அக்கினிக்குஞ்சு